Saturday, December 24, 2011

என் முதல் வளர்ப்பு...

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒரு கோடை விடுமுறை தினத்தில் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று தான் என் உயிராகப் போகவிருக்கும் என் அருமை பூனைக்குட்டியை முதன் முதலில் கண்டேன். மைதானத்திற்கு பக்கத்தில் இருக்கும் கூட்டுறவு விற்பனை நிலையம் அருகே தான் அவன் சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் கண் திறந்திருந்தான். தாயையும் சகோதர சகோதரிகளையும் காணவில்லை. தனியாக சுற்றிக்கொண்டிருந்தான். எதிர் வீட்டு கிருஷ்ணா தான் முதலில் அவனை எடுத்தான். சற்று நேரம் அவனோடு விளையாடினோம். சாம்பல் நிறத்தில் கறுப்பு திட்டுகளுடன் சிமெண்ட் ஜல்லி கலவை போல அழகாய் இருந்தான். உடன் விளையாடிய நண்பர்கள் அனைவரும் பூனையை இப்படியே விட்டு விட்டால் இறந்து விடும் என்று கூறினார்கள். கழுகோ, காக்கையோ கொத்தி விடும் என்றார்கள். எனக்கும் கிருஷ்ணாவிற்கும் அவனை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. குட்டியை கிருஷ்ணாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம்.. தொட்டாங்குச்சியில் பால் கொடுத்தோம். சிறிது நேரம் விளையாடினோம். கிருஷ்ணாவின் வீட்டில் பூனையை வைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.



நான் எடுத்துக்கொள்கிறேன் என்று தைரியமாக என் வீட்டிற்க்கு அவனை எடுத்து வந்து விட்டேன். என் அப்பாவிற்கு மிருகங்களை அவ்வளவாக பிடிக்காது. அம்மாவிற்கு மிருங்கங்களின் மீது கொள்ளை பிரியம். அதுவும் பூனை என்றால் சொல்லவே வேண்டாம்.. நாள் முழுக்க அதனுடனே இருப்பார்கள். அப்பொழுது நான், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று கூட்டுக் குடும்பமாக இருந்தோம். பாட்டியுடன் தான் அதிக நேரம் செலவளித்தேன். பாட்டி என்றுமே என்னை திட்டியது இல்லை. அவர்களிடம் தான் முதலில் பூனையை காட்டினேன்.. பால் வைத்தார்கள்.. அவனுடன் கயிரை வைத்து விளையாடினார்கள்.. அவனுக்கு ஏனோ நாங்கள் பெயர் வைக்கவே இல்லை. அவன் வந்த பிறகு எனது மற்ற வேலைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டேன். வீட்டுப் பாடங்களை கட கடவென எழுதி விட்டு அவனுடன் விளையாடிக் கொண்டே இருந்தேன். உறங்கும் பொழுதும் என்னுடன் படுக்க வைத்துக் கொள்வேன். எனக்கு அருகில் அவனை படுக்க வைப்பேன். காலையில் பார்த்தல் என் கால்களுக்கு இடையில் போர்வை மேலே சொகுசாக படுத்துக்கொண்டிருப்பான். கொஞ்சம் புரண்டாலும் செல்லமாக கடிப்பான். அவன் தாய் இல்லாமல் வளர்ந்ததால் அவன் கற்றுக்கொண்டது அனைத்துமே எங்களை பார்த்துத் தான். கழிவறையில் தான் கடன் கழிப்பான். தலையணையில் தலையை மட்டும் வைத்து மனிதர்களைப் போலவே உறங்குவான். என் கால்களை உரசிக்கொண்டே கவனம் கேட்பான். ஒரு நாளும் பால் திருட மாட்டான். அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

சில சமையங்களில் மரம் ஏறி கீழே இறங்க முடியாமல் தவிப்பான். நானும் தங்கையும் சில குரங்கு வேலைகள் செய்து அவனை இறக்கி விடுவோம். எந்த நேரமும் அவனை நாங்கள் யாரவது ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருப்போம். தெருவில் நாய்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் வீட்டின் கேட்டிற்கு நானும் அம்மாவும் கம்பி கட்டி தடுப்பு அமைத்தோம்.
அதுவும் என் எதிர் வீட்டில் நாய்கள் வளர்த்தி, பயிற்சி அளித்து விற்பனை செய்து வந்தார்கள் இரண்டு சகோதரர்கள். அவர்கள் வீட்டிலும் நிறைய நேரம் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் மூலம் தான் நாய்களின் பல ஜாதிகளை அறிந்து கொண்டேன். ஸ்டெபி என்று ஒரு லப்ரடோர் ரெட்ரீவர் (Labrador Retriever) இருந்தாள். சகோதரர்கள் இருவருக்கும் ஸ்டெபி க்ராப்ப் மீது கொள்ளை பிரியம். அது தான் பெயர் காரணம். அவளுடன் ஆவலுடன் நாங்கள் அனைவரும் விளையாடுவோம். இப்பொழுதெல்லாம் பூனை மீது தான் கவனம். ஸ்டெபியை மறந்தே விட்டேன்.

அன்றும் வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை பூனையுடன் விளையாட ஆவலாய் ஓடி வந்தேன். வந்ததும் பாட்டி தேநீர் மற்றும் மேரீ பிஸ்கட்டுடன் காத்திருந்தார்கள். பூனை எங்கே என்று கேட்டேன். அது இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், முதலில் சாப்பிடுமாறும் கூறினார்கள். மாலை சிற்றுண்டியை சுவைத்து விட்டு பூனையை தேடி புஸி புஸி என்று வீடு முழுக்க கூவிக்கொண்டே ஓடினேன். அவனை காணவில்லை. ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்தும் அவன் கிடைக்கவில்லை. ஒரு வேளை மரத்தின் மேல் ஏறி இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பானோ என்று எண்ணி மரங்களின் மீது ஏறித் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே அழுகையாய் வந்தது. சிறிது நேரம் கழித்து தான் பாட்டி விஷயத்தை உடைத்தார்கள். நான் பள்ளிக்கு சென்றதும் அப்பா பூனையை ஒரு பையில் போட்டுக்கொண்டு போய் பத்து கிலோமிட்டர்களுக்கு அப்பால் விட்டு விட்டு வந்துவிட்டார் என்று கூறினார்கள். நான் செய்வது அறியாது தவித்தேன். அப்பா என்றால் எனக்கு பயம். அப்பாவிடம் ஏன் என்று கேட்க துணிவு இல்லை. வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்தது போன்ற உணர்வு. என் பிரியமான ஜியோமெட்ரி பாக்ஸை ஒரு முறை தொலைத்த பொழுது ஏற்பட்ட அதே முடிச்சு. அவன் என் முதல் வளர்ப்பு. மனது பாரமாக இருந்தது.

இரண்டு நாட்கள் மிகவும் துயரத்தில் இருந்தேன். பின்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் காலை எழுந்து பால் வாங்க வெளியே சென்றேன். அப்பொழுது தான் எதிர் வீட்டுச் சகோதர்களின் அம்மா என்னை கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டிற்குள்ளே நுழைந்து கண்ட காட்சியை இன்றும் மறக்க முடியாது. என் அருமை பூனை அங்கு எனக்காக காத்திருந்தான். "காலைல ஸ்டெபி ரொம்ப குரைச்சா. போய் பாத்த இது செவுத்து மேல உக்காந்திருக்கு. அப்பறம் தான் உன் பூனை மாதிரி இருக்கேன்னு இங்க புடிச்சு வெச்சிருந்தேன்." என்றார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஸ்டெபி மீண்டும் குரைத்தாள். அவனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.

பாட்டியிடம் எடுத்துச் சென்றேன். "டேய் இவன் கில்லாடி பூனை டா. மரம் ஏற தெரியலனாலும், எவளோ நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சு, நாய் விக்கறவங்க வீட்டுக்கே வந்திருக்கான் பாரு." என்று துணியால் அவனை துடைத்து விட்டுப் பால் வைத்தார்கள். அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. காலை நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அப்பாவிற்கு நான் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி. "என்னடா ஸ்கூலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க. போய் தயார் ஆகு" என்றார். நான் ஏக்கத்துடன் பூனையை பார்த்தேன். அவனும் முழித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்த அம்மாவிடம், "இனிமேல கூடுதலா கால் லிட்டர் பால் வாங்கிக்கலாம்." என்று புன்னகைத்தார் அப்பா.

Sunday, June 19, 2011

நேர்க்காணல் அனுபவங்கள்

சில வாரங்களாக வேலை தேடும் படலத்தில் இருக்கிறேன்.. மென்பொருள் பொறியாளர் வேலைக்கு தான்.. வேறு எதற்கு???.. இது வரை ஏமாற்றமே.. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணிய பொழுது தோன்றிய கற்பனை இதோ...



பைனரி டிரீயின் (Binary Tree) மேல் ஏறினேன்
போதாது என்றார்கள்
வேர் (root) வரை சென்றேன்
வெட்டி விட்டார்கள்

லிங்க் லிஸ்டை (Link list) சுற்ற சொன்னார்கள்
தலை (head) முதல் வால் (tail) வரை
கிறு கிறுக்க சுற்றினேன்
மாத்திரை குடுத்து அனுப்பிவிட்டார்கள்

ஜாவா (java) கோடை (code) அலங்கரிக்க (decorator pattern) சொன்னார்கள்
பாண்ட்டை (font) மாற்றி அழகாக்கினேன்
டிசய்ன் பாட்டர்ன் (Design pattern) தெரியாதா என்று
தலையில் அடித்து தள்ளி விட்டார்கள்

ட்ரை (Trie) பண்ண சொன்னார்கள்
கேள்வியை கேளுங்கள் ட்ரை (try) பண்ணுகிறேன் என்றேன்
காதைத் திறுகி
கதவை மூடி விட்டார்கள்

உலகம் சுற்ற குறுக்கு வழி கேட்டார்கள் (Travelling Salesman Problem)
நான் அவர்களை சுற்றி
நீங்கள் தான் உலகம் என்றேன்
மாம்பழம் கூட கொடுக்காமல் துரத்தி விட்டார்கள்

என்ன உலகமடா இது??

Thursday, August 12, 2010

நூற்றுக்கு பூஜ்யம்...



கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..

ராகம் தெரியாமலே பாடல் எழுதுகிறேன்..
பாடலின் அமைப்பும் அறியாமலே..
பாதை இல்லா திசையிலே பயணிக்கிறேன் ..
ஒரு வைரமேனும் கிட்டுமோ?...
இல்லை வழிப்பறி தான் மிஞ்சுமோ?

கரையிலேயே தத்தளித்தால்..
ஆழ் கடல் செல்வதெப்போது?
வேட்டை ஆடாமல் பிழைக்க முடியுமா
இந்த அமேசான் காட்டிற்குள்ளே...

விண்வெளி செல்ல விடுமுறை வேண்டுமே..
யாரிடம் விண்ணப்பிப்பது?
நடனம் தான் ஆடுகிறேன்..
ஒரு அணுவும் வியக்கவில்லையே?

கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..

Sunday, July 04, 2010

மூளை..

டபக் டபக் டபக்.. மூன்று குவோட்டர்களை அந்த கோக் இயந்திரத்தில் போட்டான். சதுர வடிவ பொத்தானை அழுத்த, ஒரு ஜீரோ காலரி கோக் ஓட்டை வழியாக குதித்தது.

(வலது மூளை..)

"நேற்று எவ்வளவு அவமானப் படுத்தினான் அந்த வெள்ளைக்கார ஆசிரியன். அவனை சும்மா விடலாமா. மாறி மாறி இளித்தார்களே கூடவே இருந்த மற்ற நாய்கள். நீ என்ன செய்யவேண்டும் என்பதை நான் காட்டுகிறேன் பார்."

கோக்கை உடைத்தான். நுரை தள்ளியது. இரண்டு மடக்குகள் உள்ளே இறங்க கேபினின் (Caffeine) தாக்கத்தை மறு கணமே உணர்ந்தான். ஒரு மாடி ஏறிச் சென்று அந்த ஆலோசனை கூட்டத்தை அடைந்தான். அனைவரும் வந்திருந்தார்கள் ஆசிரியனைத் தவிர. ஐந்து நிமிடங்கள் கழித்து பரபரப்பாக உள்ளே நுழைந்தான் ஆசிரியன். கலந்துரையாடல் தொடங்கிற்று. அவன் மட்டும் மௌனம் காத்தான். பத்து நிமிடங்களுக்குப் பின், .44 மேக்னம் கோல்ட் அனகோண்டா (.44 Magnum Colt Anaconda) துப்பாக்கியை பையில் இருந்து எடுத்து ஆறு ரௌண்டுகள் சுட்டான். மீதமுள்ள கோக்கை பருகிக் கொண்டே சடலங்களை எண்ணத் தொடங்கினான்.





(இடது மூளை..)

"வலது மூளை சொல்வதை கேட்காதே. உன் எதிர்காலமே இந்த ஆய்வை நம்பித் தான் இருக்கிறது. இன்று கூட்டத்தில் பொறுமையாக பதில் அளி. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த ஆய்வை அரும்பாடு பட்டாவது முடித்துவிடலாம். கவலைப்படதே."

ஒரு மாடி ஏறிச் சென்று ஆலோசனை கூட்டத்தில் அமர்ந்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து ஆசிரியன் வந்தான். கலந்தாய்வு தொடங்கிற்று. மௌனம் காத்தான். பத்து நிமிடம் கழித்து பையில் இருந்து புத்தகத்தை எடுத்து குறிப்புகள் எடுக்கத் தொடங்கினான்.

Tuesday, June 15, 2010

ஈவ்..



விடுமுறைக்கு அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தாள் மாலதி. அக்கா பிரபா, சென்னையில் கணவருடன் சமீபத்தில் குடி பெயர்ந்திருந்தாள். அத்தான் பத்திரிகையாளர்.

"என்னடி ஒரு மாதிரியா இருக்கே?"

"அது ஒன்னும் இல்லக்கா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு போன் கால். எவனோ ஒருத்தன் என் பேரெல்லாம் கரெக்டா சொன்னான். அசிங்க அசிங்கமா பேசினான். நான் உடனே வெச்சுட்டேன். திரும்ப ரெண்டு மூணு தடவ கால் பண்ணான். அப்பறம் நான் அந்த நம்பர பிளாக் பண்ணிட்டேன். யாரா இருக்கும்னு தெரில." என்றாள் மாலதி.

"நம்பர பிளாக் பண்ணிடல்ல. இனி தொந்தரவு இருக்காது. இன்னொரு தடவ அந்த மாதிரி நடந்தா உடனே சொல்லு புகார் குடுத்துரலாம். புறப்படு. இன்னக்கி பாண்டிச்சேரி போறோம். மறந்து போச்சா."

"இதோ அஞ்சு நிமிஷம். ரெடி அய்டறேன்."

காலையே பாண்டிச்சேரி சென்று ஊர் சுற்றினார்கள். அத்தான் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பட்டியல் இட்டு திட்டம் வகுத்திருந்ததால் பயணம் மாலதிக்கு இனிமையாக இருந்தது.

சென்னைக்கு திரும்புகையில் அத்தான் உறங்கி விட்டார். மாலதி அக்காவுடன் பேசிக்கொண்டே கார் ஓட்டினாள். தூக்கத்தில் அத்தான் அவ்வப்பொழுது பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்தான் அவ்வப்பொழுது ப்ரக்ஸிசம் (Bruxism) ஆல் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொள்வதாகவும் அக்கா கூறினாள்.

அடுத்த நாள் கோவையில் அவசர வேலை இருப்பதாக கூறி அக்காவிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் மாலதி.

இரவு பிரபா தொலைபேசியில் அழைத்திருந்தாள். நலம் விசாரித்தாள். "உன் அத்தானோட கட்டுரை இன்னக்கி பத்திரிக்கைல வந்திருக்கு பாரு." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். மாலதி வாசிக்க மனமில்லாமல் பத்திரிக்கையை புரட்டினாள். "ஈவ் டீசிங்" பற்றி அத்தான் அருமையாக எழுதியிருந்தார். தன்னிடம் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடியவன் அவ்வப்பொழுது பல்லை கடித்துக் கொண்டதை மாலதியால் மறக்க முடியவில்லை.

Monday, June 14, 2010

தட்டி விலாஸ்

தட்டி விலாஸில் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. உலகத்திலேயே என் அம்மா சமையலுக்கு பிறகு நான் விரும்பி சாப்பிட்டது தட்டி விலாஸில் தான். அதை நடத்திக் கொண்டிருந்தது கன்னடம் பேசும் ஒரு கூட்டு குடும்பம். அவர்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டவில்லை. 'தட்டி விலாஸ்' என்பது நாங்கள் சூட்டிய பெயர். அறுபதில் இருந்து எழுபது வயதிற்குள் இருக்கும் தம்பதியர், அவர்களின் மூன்று பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண்பிள்ளை என கூட்டமான குடும்பம் அது. இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமணம் ஆன பின்பு மாப்பிள்ளை வீட்டில் குடிபெயர்ந்து விட்டாள். இரண்டாவது பெண் தன் கணவருடன் தட்டி விலாஸில் தான் வசித்து வந்தாள். இளைய மகன் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமானவர் மூன்றாவது பெண்ணாகிய சியாமளா அக்கா. இவர்களுடன் ஒரு பூனை, நான்கைந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் வசித்து வந்தன.





அவர்களை பற்றி மேலும் காணும் முன் தட்டி விலாசை சற்று காண்போம். தென்னங்கீற்றால் கான்க்ரீட் சுவரின் மீது எழுப்பப்பட்ட கூரை. தரை முழுவதும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். ஆங்காங்கே தரையில் மர மேசைகளும், இருக்கைகளும் பதிக்கப் பட்டிருக்கும். முன் சுவற்றில் சதுர வடிவில் ஒரு நுழைவாயில். கதவு கிடையாது. இரவு உறங்கும்முன் வாயிலை துணியால் மூடிக்கொள்வார்கள். உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் தேநீர், காபி போட வசதியாக மேசை, அதன் மீது ஒரு குமுட்டி அடுப்பு, கண்ணாடி டம்ளர்கள், வடிகட்டி மற்றும் பாத்திரம் கழுவ தோதான மூலை. மூத்தவர் அப்பாதான் அதன் பொறுப்பாளர். சற்று முன் நகர்ந்தால் கண்ணாடி மற்றும் அடுக்குகள் பொருத்தப்பட்ட மேசை. அதன் மீது அடுக்கடுக்காக வாழை இலைகள், பார்சல் கட்ட தேவை படும் காகிதங்கள், பாலிதீன் பைகள் மற்றும் நூல்கண்டு. பார்சல் காகிதங்கள் பெரும்பாலும் தினதந்தியாக இருக்கும். அவர்கள் தினத்தந்தியை தினமும் வாசிக்கவும், பார்சல் கட்டவும் உபயோகிப்பார்கள். கூடவே கல்லாப்பொட்டியும் இருக்கும். இதன் பொறுப்பாளர் சியாமளா அக்கா தான். வேறு யாரும் நெருங்க மாட்டார்கள். அதை தொடர்ந்து சாப்பிட உட்கார மேசைகள் மற்றும் நாற்காலிகள். மேலும் முன் சென்றால் நுழைவாயிலுடன் ஒரு தடுப்புச் சுவர். அதன் ஊடே இரண்டு சிறிய அறைகள். முதல் அறையில் சமையல் வேலை நடக்கும். சமைக்க பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்துவார்கள். இரண்டாம் அறையில் தான் அனைவரும் உறங்குவார்கள். ஒரு தொலைகாட்சிப் பெட்டியும் அங்கு துணைக்கு இருந்தது.

எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி, உணவு அட்டை நுழைவாயிலிற்கு அருகே தோதான இடத்தில் மாட்டப்பட்டிருக்கும். இட்லி 1.50, தோசை 4, வெங்காய ஊத்தாப்பம் 5.50, ஆம்லெட் 3, அளவு சாப்பாடு 14, தேநீர் 2, காபி 3, பால் 3. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. நாங்கள் வசித்த பகுதி நகரத்திற்கு அப்பால் இருந்ததால் மக்கள் குறைவாகவே தென்படுவர். தட்டி விலாஸ் தான் எங்கள் பகுதியின் பிரதான மையம். உணவகத்திற்கு அனைத்து வித மக்களும் வந்து போவார்கள். நிறைய விசுவாசிகளும் உண்டு, நான் உள்பட. குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள். காலை ஏழு மணி முதலே இவர்கள் வர தொடங்கிவிடுவார்கள். சியாமளா அக்காதான் அனைவருக்கும் இலை போடுவாள், பரிமாறுவாள், கணக்கெழுதுவாள். சமைப்பது இரண்டாவது பெண் மற்றும் அம்மா. சியாமளா அக்கா சலிக்காமல் அனைவரிடமும் அன்பாக பேசி, பறவையாக பறந்து வேலை செய்வாள். சட்டை, பாவாடை அணிந்திருப்பாள். எண்ணெய் தடவி வழித்து வாரி பின்னப்பட்ட குறைவான தலைமுடி. எவ்வளவு பேர் வந்தாலும், யார் என்ன வாங்கினார்கள் என சரியாக ஞாபகம் வைத்து கணக்கும் போட்டு கச்சிதமாக வியாபாரம் செய்வாள். அவர்கள் ஏழைகளாக இருந்து, குடும்பத்தின் கூட்டு முயற்சியால் ஓரளவுக்கு முன்னேரி இருந்தார்கள். இரவு நேரங்களில் குடிகாரர்களும் வருவார்கள். சிலர் வாயிலெடுத்தும் பார்த்திருக்கிறேன். முகம் சுழிக்காமல் வேலை செய்வாள் சியாமளா அக்கா.



நானும் என் தங்கையும் அடிக்கடி அங்கு சாப்பிட செல்வோம். இருபது ரூபாயில் இருவரும் வயிறு முட்ட தின்றுவிடுவோம். முதலில் ஆவி பறக்க நான்கு இட்லி வாங்குவேன். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் தக்காளி சட்னி. சியாமளா அக்கா தான் ஊற்றுவார். அதிகமும் ஆகாமல், குறையவும் அல்லாமல் சரியாக அளந்து ஊற்றுவார். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கட கடவென விழுங்கி விடுவேன். எப்படித்தான் செய்வார்களோ. பின்னர் இரண்டு தோசைகள். முறுகலாக நேர்த்தியாக சுடப்படிருக்கும். சொர்க்கத்தை சுவைத்தது போல உணர்வேன். பின்னர் அம்மா, அப்பாவிற்கு பார்சல் கட்டிக்கொண்டு அடுத்தது எப்போ வரலாம் என்று யோசனை செய்து கொண்டே விடை பெறுவோம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மதியம் சாப்பாடு தட்டி விலாஸில் தான். அவர்களின் ரசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பளம் கூட அமிர்தமாக இருக்கும்.




விடுமுறை நாட்களில், இரவு வேளைகளில் நண்பர்களுடன் தட்டி விலாஸில் ஒரு முறையும், வீட்டில் ஒரு முறையுமாக மாய பஜார் ரங்காராவ் போல வெளுத்து கட்டுவேன். எந்த நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும். தட்டி விலாஸும் ஒரு நாள் மூடப்பட்டது. சியாமளா அக்கா திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறினர். அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கேள்விப் பட்டேன். மிகவும் வருந்தினேன். என் வாழ்வில் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன். அவர்களுக்கு பின்னர் எங்கள் பகுதியில் பல உணவகங்கள் வந்து சென்றன. ஒன்று கூட தட்டி விலாஸ் தந்த உணர்வை, சுவையை தரவில்லை.

காலம் சென்றது. நானும் வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாவது முறையாக ஒரு கன்னட உணவகத்தில் சாப்பிட்டேன். சாம்பார் இனித்தது, இட்லி கசந்தது. சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு தட்டி விலாஸின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்தது, இன்றும் வருகிறது.

Saturday, June 12, 2010

அறியா(மை)


"என்னடா சோகமா இருக்க?" என்று கேட்டுக் கொண்டே கோல்டு பில்டர் சிகரெட்டை பற்ற வைத்தான் மணி. எட்டாம் வகுப்பிலிருந்தே புகை பிடிக்க அரம்பித்துவிட்டிருந்தான்.

அன்று என் ஆயிரம் ருபாய் விலைமதிப்புள்ள கால்குலேட்டரை தொலைத்திருந்தேன். வீட்டில் சொன்னால் மரண அடி விழும். செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தேன்.

"கால்குலேட்டர் காணாம போச்சுடா."

"எப்டிடா தொலைச்ச?"

"பஸ்ல பேக்ல இருந்து எவனோ உருவிட்டான்னு நெனக்கறேன்."

"ஆமா நீ அனிதாவையே பாத்துட்டு இருந்திருப்பே. உன் சட்ட பேன்ட உருவிருந்தா கூட உனக்கு தெரிஞ்சிருக்காது."

"நானே கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன்டா."

"சரி விடு மச்சி. இதுக்கு போய் கவலை படற. ஈசியா கண்டுபிடிச்சரலாம். தம் வேணுமா?" என்று வழக்கம் போல் கேட்டான் மணி.

"செருப்படி வாங்கி குடுக்காம விட மாட்ட போல. தம் அடிச்சா எங்க வீட்டு நாயே கண்டுபுடிச்சுரும்." என்று நானும் வழக்கம் போல் சிகரெட்டை தவிர்த்தேன்.

"மணி அது எப்டிடா ஈசியா கால்குலேட்டர கண்டுபிடிக்கறது? பேசாம போலீஸ் கம்ப்ளைண்டு குடுத்துரலாமா?"

"இது உனக்கே ஓவரா தெரில?" என்று காரப்பார்வை பார்த்தான் மணி.

"வேற வழி இருக்கா. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க."

"எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு மதுக்கரைல இருக்காரு. ஒரு நூறு ரூபா குடுத்தா கல்குலேட்டர் இருக்கற எடத்த புட்டு புட்டு வெச்சுருவார். "

"யாருடா அந்த மகான். ஆமா அது சரி, நான் நூறு ரூபாக்கு எங்க போவேன்?"

"இருக்கவே இருக்கான் நம்ம தரணி. அவன் கிட்ட வாங்கிக்குவோம். அப்பறமா சேத்து வெச்சு குடுத்திரலாம்." என்று மறுக்க முடியாத ஒரு யோசனையை கூறினான் மணி.

"அதுவும் சரி தான். எப்டி அந்த ஆளு கண்டுபிடிச்சு குடுப்பாரு? அவரு பெரிய மாபியாவா?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ கிளம்பு. நம்ம மதுக்கரைக்கு போலாம். நீயே நேர்ல பாத்துக்கோ."

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு மதுக்கரை சென்றடைந்தோம். சிமென்ட் தொழிற்சாலைகள் நிரம்பி வழியும் பகுதி. நகரத்திற்கு அப்பால் இருந்தமையால் அந்த சுற்றுவட்டாரமே வெறுச்சோடி கிடந்தது. தூசு படிந்த காற்று. இதமான வெய்யில். தொய்வில்லாமல் நடக்கலானோம். ஒரு கிலோமீட்டர் நடந்த பின்னர் சில வீடுகள் தென்பட்டன. மணி ஒரு வீட்டை நோக்கி நடந்தான். நான் பின்தொடர்ந்தேன்.

ஒரு எளிமையான வீடு. முட்களால் ஆன வேலி. ஒரு சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். வெளிப்புறத்தே பல வகை செடிகள் இருந்தன. திருஷ்டி பூசணிக்காய் மாடி மேல் இருந்து சிரித்தது. முன்கதவின் மேலே ஒரு வாஸ்து இயந்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் லேசாக பயம் ஒட்டிக்கொண்டது.

"நீ இங்கயே இரு. நான் உள்ள போய் பேசிட்டு வரேன்." என்று தனியே விட்டு விட்டு போனான் மணி.

சிறிது நேரம் கழித்து மணி உள்ளிருந்து அழைத்தான். யார் இந்த ஆள்?. எப்படி என் பொருளை கண்டுபிடிப்பான் என்று வழி நெடுக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மணியையும் பல முறை கேட்டு விட்டேன். அவன் பதில் கூற மறுத்து விட்டான்.

உள்ளே சென்றேன். அறைகள் முழுவதுமாய் சாமி படங்கள். ஒரே புகை மூட்டமாய் இருந்தது. ஒரு பாய் விரித்திருந்தது.

"உக்காருங்க. ஐயா இப்போ வந்திருவாரு" என்று ஒரு நடுத்தர வயது ஆசாமி திடிரென்று தோன்றி கூறினான்.

நாங்கள் அமர்ந்தோம். தண்ணீர் குடுத்தான் அந்த ஆசாமி. நடந்த களைப்பில் நிறையாவே குடித்தேன்.
குடித்த பின்பு தான் கவனித்தேன். தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. லேசாக உப்புக் கரித்தது.

"என்னதுங்க இது?" என்றேன்.

"கோமியம். ஒடம்புக்கு ரொம்ப நல்லது." என்று இளித்தான் அந்த எடுபிடி. எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பாக்கெட்டில் இருந்த இரண்டு தேன் மிட்டாய்களை வாயில் போட்டுக்கொண்டு சமாளித்தேன்.

"இப்போவாவது சொல்லுடா. இந்த ஆளு பெரிய திருடனா? நிறைய கனெக்சன் வெச்சிருக்கானா? அப்டி இருந்தாலும் ஒரு கல்குலேட்டர கண்டுபிடிக்கறது ரொம்ப சிரமம் ஆச்சே?"

"பேசாம இருடா. சாமி வந்துட்டாரு"

"என்னது சாமியா. என்ன சொல்ற. எங்க இருக்காரு?"

"அங்க பாரு வர்றாரு."

தமிழ் சினிமா கதாநாயகி போல புகை சூழ பின் வாசல் வழியாக மூன்றடி உயரத்தில் ஒரு அரைக்கிழவன் வந்தான். அவனை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயை பொத்தி சிரமப்பட்டு சிரிப்பை அடைத்தேன்.

"ஏன் சிரிக்கற. அவரு எவளோ பெரிய ஆளு தெரியுமா. உன் கால்குலேட்டர் எங்க இருக்குனு அவரு சொல்லலேன்னா என் பேர மாத்திக்கரேண்டா." என்று மணி என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

"என்ன தம்பி என்ன பிரச்சன?" என்றார் சாமி.

இம்முறை வாய்விட்டு பலமாக சிரித்தேன். பின்னே பெண் குரலில் பேசினால் யாருக்கு தான் சிரிப்பு வராது. மணி என்னை முறைக்க சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சித்து இரண்டு முறை இடைவெளி விட்டு சிரித்து முடித்தேன். சாமி இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

"சாமி இவனோட கால்குலேட்டர காணோம். நீங்க தான் எப்டியாவது கண்டுபிடிச்சுக் குடுக்கணும்."
என்றான் மணி.

"காணிக்கை கொண்டு வந்திருக்கீங்களா?"

ஆம் என்று தலை ஆட்டினோம்.

"இந்த தட்ல போடுங்க." என்றார் சாமி. முழுதாக நூறு ரூபாயை போட்டோம்.

"கால்குலேட்டர் தானே இப்பவே எங்க இருக்குனு பாத்துடலாம்." என்று கூறிக்கொண்டே ஒரு வெற்றிலையை எடுத்தார் சாமி. கூடவே நின்று கொண்டிருந்த எடுபிடி மை டப்பாவை நீட்டினான்.

வெற்றிலையில் மையை தடவி வாயில் ஏதோ முணுமுணுத்தார் சாமி. எனக்கு நூறு ருபாய் அம்பேல் என்று உறுதியாக தெரிந்துவிட்டது.

"சாமி எதாவது தெரியுதுங்களா." என்றான் மணி ஆவலுடன்.

"ஒரு நிமிஷம்." என மீண்டும் முணுமுணுத்தார் சாமி. ஏதோ ஜக்கம்மா மந்திரம் போல கேட்டது.

"இப்போ பொருள் சேலத்துல இருக்கு. சரியா சொல்லனும்னா சேலத்த தாண்டி தர்மபுரி நோக்கி போய்ட்டு இருக்கு."

"என்னடா இந்த ஆளு பஸ் ரூட்டெல்லாம் சொல்றான்." என்றேன்.

"சும்மா இருடா. என்னதான்னு கேப்போமே. சாமி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."

"நீங்க தேடற பொருள் தர்மபுரிய நோக்கி போய்ட்டு இருக்கு. திருடன் பஸ்ல போய்ட்டு இருக்கான்னு நெனக்கறேன். இதுக்கு மேல தொறத்தி பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உள்ளூர்ல இருந்தா சுலபமா மடக்கி புடிச்சிருக்கலாம். உங்க கெட்ட நேரம். கெடைக்கறது ரொம்ப கஷ்டம்." என்று புன்னகையுடன் கூறினார் சாமி.

"இந்த ஆளுக்கு நல்ல நேரம். நல்ல ஆளுகிட்ட கூட்டிட்டு வந்தடா. இத முன்னாடியே சொல்லிருந்தா வந்தே இருக்க மாட்டேன். இப்போ இன்னொரு நூறு ரூபாயும் போச்சு." என்று மணியை திட்டினேன்.

"ஜிபிஎஸ் (GPS) எல்லாம் இந்த ஆளு முன்னாடி ஒண்ணுமே இல்ல. வெத்தலைலையே மேப்பு போடறான். ஏன்டா நீ இவன பத்தி முன்னாடியே சொல்லல? " என்று நான் கடுகடுத்தேன்.

"பரம ரகசியம்னு சாமி சொன்னாரு. மின்னாடியே வெத்தல மேட்டர சொன்னா மந்திரம் பலிக்காதுன்னு போன தடவ வந்த போது சொன்னாரு. " என்றான் மணி.

"அடப்பாவி நீ அடிக்கடி வந்து போற எடமா இது. படிச்சவன் தானடா நீ."
மணி வெட்கித் தலை குனிந்தான்.

"தம்பிங்களா மணி ஆறாகப் போகுது. நான் ஜகன் மோகினி யாகம் செய்யணும். கொஞ்சம் சீக்கரம் எடத்த காலி பண்ணுங்க." என்றான் அந்த பித்தலாட்டக்காரன்
.
சிரித்துக்கொண்டே "ரொம்ப நன்றிங்க. அப்போ நாங்க கிளம்போரங்க." என்று கூறி ஒரு வழியாக இடத்தை காலி செய்தோம்.

மணியை அன்று திட்டியது போல் நான் இது வரை யாரையும் திட்டியது இல்லை. கால்குலேட்டர் தொலைந்ததை வீட்டில் இன்று வரை சொல்லவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து மணி தொலைபேசியில் அழைத்தான்.

"டேய் மச்சான் என் ஆள நாலு நாளா காணோம். வீடு கூட பூட்டிருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரில."

"நீ அங்கேயே இரு. நான் உடனே வரேன். மதுக்கரைக்கு போலாம்." என்று நான் கூறியதும் மணி இணைப்பை துண்டித்து விட்டான். உள்ளுக்குள் மிதமாக நகைத்துக்கொண்டேன்.